Tuesday, March 30, 2010

மோசேயிலும் பெரியவர்

இயேசுவுக்கே மகிமை

மோசேயிலும் பெரியவர்

யாத்திராகமம் 17 : 11. மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

12.
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.

என்னுடைய வாழ்கையில் வந்த தாங்க முடியாத தோல்விகள், என்னுடைய மேன்மையாக நான் கருதிய ஒன்றை நான் இழந்த போது நான் அடைந்த வேதனையின் உச்ச கட்டத்தின் போது அநேக நேரங்களில் நான் மோசேயை நினைத்திருக்கிறேன். அதாவது மோசேயினுடைய கைகள் உயர்த்தப் பட்டபோது அவனுக்கு ஜெயம் கிடைத்தது. இப்படி இந்நாட்களிலும் யாராகிலும் இருந்திருந்தால் நான் போய் எனக்கு ஜெயம் உண்டாகும்படி உதவி கேட்டிருக்கலாமே என்று.

அப்பொழுது ஒரு நாள் எனக்கு உணர்த்தப்பட்டது என்னவென்றால் மோசேயிலும் பெரியவர் நமக்கு உண்டு என்று. யார் அவர்? ஆம் அவர் தான் நம்மை நேசிக்கிறவரும், நாம் நேசிக்கிறவருமாகிய நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து. ஏன் அவர் மோசேயிலும் பெரியவர்?

மோசேயினுடைய கைகள் உயர்த்தப்பட்டபோது ஜெயம் கிடைத்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல அவனுடைய கைகள் தளர்ந்து போனது, அப்பொழுது அவனுடைய கைகள் கீழே இறங்கியது, தோல்வி ஏற்ப்பட்டது, ஆகவே அவனுடைய கைகளை ஊரும், ஆரோனும் தாங்கி பிடித்தனர்.

அதுபோலவே நமக்கு ஜெயம் கிடைக்கும் படி ஆண்டவராகிய இயேசு, கல்வாரி சிலுவையில் தம்முடைய கரத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. சுமார் ஆறு மணி நேரம் சிலுவையில் தொங்கினார், அந்த ஆறு மணி நேரமும் அவர் கரங்களை உயர்த்த வேண்டியிருந்தது. நிச்சயமாக கரங்கள் சோந்து போகும், ஆனால் அவருடனிருந்த சீஷர்கள் பயந்து போய் அவரை தனிமையாய் விட்டு விட்டார்கள். அவருடைய கரத்தை தாங்கி பிடிக்க யாருமில்லை, எனவே சிலுவையிலே உயர்த்திய இரண்டு கரங்களும் சோர்ந்து கீழே இறங்காதபடி இருக்க தன் இரண்டு கரங்களையும் ஆணிகளால் அடித்து நிலை நிறுத்த ஒப்புக்கொடுத்தார்.

தாயிலும் மேலான அன்பு :

ஏசாயா 26:20 என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

தாய் கோழியானது பருந்துகள் வரும்போது ஒரு விதமான சத்தம் எழுப்பிக் கொண்டு தன் இரண்டு ரக்கைகளையும் உயர்த்தி தன் குஞ்சுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும், குஞ்சுகளும் அதனுள் ஓடி ஒளிந்து கொள்ளும். அது போலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு தாய் கோழியை போல தன் இரண்டு கைகளையும் உயர்த்தி தன் சிறகுகளின் கீழே அடைக்கலமாய் வரும்படி ஆவலாய் நம்மை அழைக்கிறார்.

ஏசாயா 49:15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

தாயினுடைய அன்பு மிகவும் விசேஷித்தது. ஒரு கூலிவேலை செய்யும் தாய், தன்னுடைய வேலையை முடித்து வந்து, தன்னுடைய சிறு குழந்தையுடன், களைப்போடு கூட ரயில் நிலையத்துக்கு வெளியே அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக சில ரயில்கள் மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்றன. அந்த தாயை அந்த சத்தம் தட்டியெழுப்ப முடியவில்லை. சற்று நேரம் சென்றது, பலத்த சத்தத்துடன் இடி, இடித்தது. அதுவும் அவள் தூக்கத்தை கலைக்க முடியவில்லை, அவ்வளவு களைப்பு. ஆனால் சற்று நேரம் சென்று தன் பச்சிளம் குழந்தை தூக்கத்தை விட்டு எழுந்து லேசாக அழ ஆரம்பித்தது, அவ்வளவு தான் தாமதம் ரயிலின் ஓசைக்கும், இடி முழக்கத்துக்கும் எழும்பாத தாய், அந்த லேசான அழு குரலுக்கு எழுந்து தன் குழந்தையை மார்போடு கூட அனைத்துக் கொண்டாள். அது தான் ஒரு தாயினுடைய அன்பு. ஆனால் ஆண்டவருடைய அன்பு தாயினுடைய அன்பை காட்டிலும் மிகவும் விசேஷித்தது.

மத்தேயு 23:37 கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

தாய் கோழி ஒன்று தன் குஞ்சுகளோடு, காட்டில் இரை மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென காட்டுத் தீ நான்கு பக்கமும் பரவியது. தாய் கோழி தீயிலிருந்து தப்ப எவ்வளவோ முயற்சித்தது, முடியவில்லை. வேறு வழியில்லை, தாய் கோழி தன் இரண்டு சிறகுகளையும் உயர்த்தியது, குஞ்சுகள் அதன் செட்டையின் கீழ் அடைக்கலம் புகுந்தது. தாய் கோழி தன் சிறகினுள் குஞ்சுகளை வைத்து அப்படியே அமர்ந்து விட்டது. சற்று நேரமானது, தீயானது அப்படியே அந்த தாய் கோழியை எரித்து கொன்று போட்டது. திடீரென மழை பெய்யவே, அந்த காட்டு தீ அணைந்து போனது. மறு நாள் வேடன் ஒருவன் அந்த வழியே வந்தான். கருகிய நிலையில் செத்து போயிருந்த தாய் கோழியை பார்த்தான், தன் கையிலிருந்த கம்பால் அதை குத்தி அப்புறப்படுத்த முயன்ற போது, சிறகினுள் இருந்த குஞ்சுகள் உயிரோடிருந்த படியால் அவைகள் மகிழ்ச்சியாய், வெளியே வந்தன.

ஆம் பிரியமானவர்களே இயேசுவும் அப்படிதான், ஒரு தாய் கோழியை போல நம்மை உயிரோடு பாதுகாக்கும் படி தன் இரண்டு கரத்தையும் ஒரு தாய் பறவையின் சிறகை போல உயர்த்தி காண்பித்து, சிலுவையிலே அவர் நமக்காக மரித்தார். அவருடைய சிறகின் கீழ் அடைக்கலம் புகுந்த நாமோ இன்றும் உயிரோடிருக்கிறோம்.


மோசே தன் கைகளை உயர்த்திய போது அன்று ஒருநாள் மட்டுமே ஜெயம் கிடைத்தது. அகாஸ்வேரு ராஜா தன் பொற் செங்கோலை நீட்டிய போது, அதின் நுனியை பிடித்த எஸ்தர் காப்பாற்றப்பட்டாள். ஆனால் இவர்கள் எலாரிலும் பெரியவர் இயேசுவினுடைய பொற்கரம் நமக்கு உண்டு. அவருடைய கரத்தை நாம் பிடித்தால் இன்றைக்கும் நமக்கு ஜெயம் உண்டு.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

இயேசுவின் நேசம்

இயேசுவுக்கே மகிமை

இயேசுவின் நேசம்

உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.

திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது.

இயேசுவை அறியாதவர்கள் இன்று, மதுபானங்களை அருந்தி தங்கள் குறைவுகளை மறக்க நினைக்கிறார்கள். ஆனால் சில மணிநேரங்கள் மட்டுமே அது சாத்தியமாகிறது.

நீதிமொழிகள் 31 :

6. மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங் கசந்தவர்களுக்குத் திராட்ச ரசத்தையும் கொடுங்கள்;

7.
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

ஆகவே தான் பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி அவருடைய சிரசிலிருந்து பாதம் வரையிலான காயங்களிலிருந்து வடிந்து வந்தது.

இயேசு இந்த பூமிக்கு ஏன் வந்தார்? கலங்கிய கண்களோடும், உடைந்த உள்ளத்தோடும் வாழும் மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி வந்தார். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,

ஏசாயா 61 :

1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

2.
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,

3.
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

உன்னதப்பாட்டு 1 : 2. இயேசுவின் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.


கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Monday, March 29, 2010

கீலேயாத்தின் பிசின் தைலம்

இயேசுவுக்கே மகிமை

கீலேயாத்தின் பிசின் தைலம்

எரேமியா 8:22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

கீலேயாத் மலையில் ஒரு விதமான மரம் உள்ளது, அந்த மரத்தை கூரிய கற்களாலோ அல்லது கத்திகளாலோ குத்தி சிதைக்கும் போது அந்த மரத்திலிருந்து சிவப்பு நிறமான பிசின் வடியும், அது காயங்களையும், ரணத்தையும் ஆற்ற வல்லமையுள்ளது.

அந்த மரத்தின் பிசின் தைலத்துக்கு மனிதனுடைய வெளிப்புற காயங்களை மட்டுமே குணமாக்க முடியும். ஆனால் கீலேயாத்தின் அந்த மரத்தை காட்டிலும் விஷேசித்த ஒரு பச்சை மரம் நமக்கு உண்டு. [லூக்கா 23:31 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.] ஆம் அவர் தான் நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை ஆணிகளால் அடித்தார்கள், சாட்டை வாரினால் அவரது முதுகை ஒரு வயல் நிலத்தை உழுவது போல கிழித்தார்கள். பொற்கிரீடம் சூட்டப்பட வேண்டிய சிரசினிலே முட்கிரீடம் சூடினார்கள். அப்போது அவருடைய சரீரத்திலிருந்து வடிந்த அந்த ரத்தம் மனிதனுடைய வெளிக்காயங்களை மட்டுமல்ல உள் காயங்களையும் ஆற்ற வல்லமையுள்ளது. மட்டுமல்ல நொறுங்குண்டு போன இதயத்தின் காயங்களையும் ஆற்ற வல்லமையுள்ளது.

சங்கீதம் 147:3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

அவருடைய விலையேறப் பெற்ற ரத்தத்தினால் நமக்கு பாவ மன்னிப்பும் கிடைத்தது. இயேசுவின் ரத்ததினாலேயே அன்றி பாவமன்னிப்புக்கு வேறு ஒரு வழியே இல்லை.


சங்கீதம் 103 : 3. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Friday, March 26, 2010

இன்று ஒரு கேள்வி - 1

இயேசுவுக்கே மகிமை

இன்று ஒரு கேள்வி - 1

1 . பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் தேவன், கர்த்தர், ஆண்டவர், பிதா என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?


2 .
பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசு என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 02.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சலில் வெளியிடப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Thursday, March 25, 2010

தமிழ் தட்டச்சு

இயேசுவுக்கே மகிமை

தமிழ் தட்டச்சு


கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே, இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! கிறிஸ்துவுக்காக எழுதவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருக்கிறது, ஆனால் தமிழ் டைப் ரைட்டிங் தெரியாது அதுதானே பிரச்சினை என்கிறீர்களா ? உங்கள் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://www.google.com/transliterate/Tamil

இப்போது நீங்கள் அம்மா என்று டைப் செய்ய விரும்புகிறீர்களா? ammaa என்று ஆங்கிலத்தில் டைப் செய்துவிட்டு என்டர் செய்யுங்கள், இப்போது ஆங்கில வார்த்தை அம்மா என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நமக்கு கிடைக்கும். இயேசுவே என்று டைப் செய்ய yesuve என்று ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள், இப்போது என்டர் பண்ணுங்கள் ஏசுவே என்று வரும். ஆனால் நீங்கள் ஏசுவே என்று விரும்பாமல் இயேசுவே என்று வர விரும்பினால் yesuve என்று வந்தவுடன் இரண்டுமுறை backspace என்டர் செய்யுங்கள், இப்போது ஐந்து விதமான வார்த்தைகள் வரும். அதில் சரியானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளவும். கூகிள் நிருவனதிற்க்காக தேவனை துதிக்கிறேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவனுடைய நாம மகிமைக்காக நீங்கள் இப்பொழுது எழுத ஆரம்பியுங்கள்.

மேற்கூறிய யாவும் online லில் மட்டுமே பண்ண முடியும். நீங்கள் off line லில் பண்ண விரும்பினால் Google Transliteration IME என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிப்பொறியில் install செய்துகொள்ளவும்.

http://www.google.com/ime/transliteration/


மேலும் விவரங்களுக்கு Installation Instructions ஐ பார்க்கவும்

http://www.google.com/ime/transliteration/help.html#installation

நீங்கள் சிறந்த படைப்புகளை அனுப்பினால் நமது இன்று ஒரு தகவல் வேதமும் விளக்கமும் நடுவர்க் குழு ஆய்வு செய்து மின்னஞ்சலாக அனுப்ப தயாராக உள்ளது, மேலும் நமது http://vethamumvilakkamum.blogspot.com/ லும் வெளியிடப் படும். தங்களது படைப்புகள் கீழ்க் கண்ட நிபந்தனைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.

1 .தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக இருக்க வேண்டும்.

2 .பரிசுத்த வேத வசனகளுக்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது.

3 .ஆவிக்குரிய ஜீவியத்துக்கு பயன்படுவதாக அல்லது ஆவியை உற்சாகப் படுத்துவதாக இருக்க வேண்டும்.

4 .இன்று ஒரு தகவல் வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

5 .உங்கள் படைப்புகளை திருத்தி அமைக்க நடுவர்க் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.

6 .உங்கள் படைப்புகள் கட்டுரையாகவோ, கவிதைகளாகவோ, சிறுகதைகளாகவோ, இந்தியாவின் மூடப் பழக்க வழக்கங்களால் ஏழை ஜனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளாகவோ, மூடப் பழக்க வழக்கங்களை வேரறுக்க வாலிபர்களை தூண்டுவதாகவோ, சமுதாய சீரழிவுகளை விளக்குவதாகவோ, ஜெபிக்கிற ஜெப வீரர்களை உற்சாக படுத்துவதாகவோ, விசுவாசத்தை உயிர்பிக்கிற உயிருள்ள சாட்சிகளாகவோ இருக்கலாம்.

5 .உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail .com

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Wednesday, March 24, 2010

பொன்னைப் போல

இயேசுவுக்கே மகிமை

பொன்னைப் போல

நீதிமொழிகள் 27:21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

பொன்னை வெட்டி எடுக்கும்போது அதில் பலவிதமான அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அவற்றை அதிலிருந்து நீக்க வேண்டுமேயானால் அதை அக்கினிக்கு உட்படுத்தி புடமிட வேண்டும். மேலும் அதிலுள்ள களிம்பை நீக்க வேண்டுமானால் அதை சுத்தியால் அடிப்பார்கள். இப்படி பலமுறை செய்யும் போது அந்த பொன்னுக்கு மிகவும் வலிக்கும், ஆனாலும் பொன்னிலுள்ள அழுக்கும், களிம்பும் நீங்குவதால் அந்த பொன் ஜொலிக்க ஆரம்பிக்கிறது. இப்போது தான் அந்த பொன் ஆபரணங்களாக வடிவமைக்கப் பட்டு அநேகருக்கு பயன்படுகிறது.

இதுபோலவே ஒரு மனிதனை தேவன் உலகத்திலிருந்து எடுக்கும்போது அவனுக்குள் உலகத்தின் பாவங்களும், குடிப்பக்கங்களும், விக்கிரக ஆராதனைகளும் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அதை அவனை விட்டு நீக்க வேண்டு மேயானால் தேவன் அவனை சிலப் பாடுகளுக் குட்ப்படுத்துகிறார். ஆகவே தான் பக்தன் யோபு சொன்னார் யோபு 23:10 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

ஒரு மனிதனை பாடுகளுக்கு உட்படுத்தும்போது தான் அவனுடைய நேர்மை, பொறுமை, சகிப்புத் தன்மை இவைகளை அந்த மனிதனே அறிந்துகொள்ள முடியும். தேவன் ஒரு மனிதனை புடமிடுவது அவர் தெரிந்து கொள்ள அல்ல, நாம் நம்மைப் பற்றி அறிந்து கொள்ளவே.

நீதிமொழிகள் 17:3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

வெள்ளிக்கு ஒரு விதமான புடம், பொன்னுக்கு இன்னொரு விதமான புடம் அதுபோல ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஒரு விதமான புடம். அதாவது ஒரு சிலருடைய பொறுமையை அவர்களே தெரிந்து கொள்ள அவர்களுடைய Boss ம், வேறு சிலருடைய பரிசுத்தத்தை அறிந்து கொள்ள சில மாடர்ன் டிரஸ் அணிந்த பெண்களும், ஒரு சிலருடைய நேர்மையை அறிந்து கொள்ள அவர்களுடைய மிகக் குறைந்த சம்பளமும், ஒரு சிலருடைய சகிப்புத் தன்மையை அறிந்து கொள்ள அவர்களுடைய மனைவியோ அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ ஏற்ப்படுத்தப் பட்டிருக்கலாம்.

யோபு 28:1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

இவற்றில் பொன் அக்கினியில் போடப்பட்டாலும் அது எரிந்து போவதில்லை. ஆனால் அது பிளாஸ்டிக்காகவோ, விறகாகவோ அல்லது வைக்கோலாகவோ இருந்தால் எரிந்து போய்விடும். பொன்னோ தீயின் அனல் அதிகமாக, அதிகமாக இன்னும், இன்னும் அதிகமாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

ஒருசிலர் பரிசுத்தமாக, நேர்மையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதைப் பார்த்து பொறுக்காத சில Boos கள் அல்லது அவர்களுடைய உடன் பணிபுரியும் சக நண்பர்கள் இவர்களுக்கெதிராக இல்லாத பொல்லாதவைகளை சொல்லி இவர்களுக்குக் கெட்டபெயருண்டாகும் படி செய்துவிடுவார்கள். சில பெண்கள் பரிசுத்தமாய் வாழ விரும்பினால், அவர்களுடைய Boos களுடைய தவறான விருப்பங்களுக்கு ஒத்துப் போக மறுத்தால் அவர்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வுகளை தடுத்து, இவர்களை காட்டிலும் திறமை குறைந்தவர்களுக்கு கிடைக்க செய்து விடுவார்கள். ஆனாலும் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. எந்நாளும் அப்படியிருக்க விடமாட்டார்.

சங்கீதம் 66:12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

ஆம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அப்படித்தான் பிரச்சினை வந்தது. ஆனால் அவர்கள் பொன்னாய் இருந்தபடியால் எரிந்து போகவில்லை மாறாக ஜொலித்தார்கள். ஆனால் வைக்கோல்கள் போன்ற சிம்சோன், சாலமோன் போன்றவர்கள் எரிந்து போனார்கள்.

.தானியேல் 3:21 அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.


22.
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

23.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

24.
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.

25.
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

26.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

27.
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

28.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

11. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

12.
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

13.
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

14.
அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

15.
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்;

ஏசாயா 43:2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Tuesday, March 23, 2010

நமக்கொருவர் தேவை

இயேசுவுக்கே மகிமை

நமக்கொருவர் தேவை

சங்கீதம் 40:2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சதுப்பு நிலக் காடுகளின் போகும்போது மிகுந்த கவனத்துடன் நாம் நடந்து செல்லவேண்டும். நமக்கு சாதாரண மணல் தரை போன்று தெரியும், ஆனால் சகதிகள் நிறைந்த பகுதிகள் ஏராளமுண்டு. திடீரென்று ஒருவர் தவறி அந்த புதை மண்ணில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அதிலிருந்து வெளியே வருவது கூடாத காரியம். அவர்களை காப்பாற்ற நிச்சயமாக மற்றொருவருடைய உதவி தேவை.

அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்றால் இன்னும் அந்த சகதியில் அமிழ்ந்து கொண்டு போவார்களே தவிர அவர்கள் அதை விட்டு வெளியே வருவது கூடாத காரியம். அதாவது அவன் தன்னுடைய வலது காலில் அதிக பலத்தை செலுத்தி தனது இடது காலை வெளியே எடுக்க நினைப்பான். ஆனால் அவனுடைய வலது கால் அந்த புதை மணலில் அதிக ஆழத்தில் புதைந்து விடும். இப்போது அவன் தன்னுடைய இடது காலில் அதிக பலத்தை செலுத்தி தனது வலது காலை வெளியே எடுக்க நினைப்பான, ஆனால் அவனுடைய இடது கால் அந்த புதை மணலில் அதிக ஆழத்தில் புதைந்து விடும். இப்படி அவன் தன் சொந்த முயற்சியில் போராடினால் சில நிமிடங்களில் அவனுடைய சரீரம் முழுவதும் அந்த சகதியில் அல்லது புதை மணலில் அமிழ்ந்து விடும். இந்த சூழ்நிலையில் அவன் உயிர் பிழைக்க ஒரே ஒரு வளி அவனை, அந்த சகதிக்கு வெளியில் உள்ள ஒருவர் காப்பாற்ற முன்வர வேண்டும்.

அதுபோலவே பாவத்தில் அடிமைப் பட்ட ஒருவன் தன் சொந்த முயற்சியில், அந்த பாவத்திலிருந்து விடு பட முயற்சித்தால், அவன் மீண்டும் அந்த பாவத்தில் அமிழ்ந்து அழிந்து போவானே ஒழிய அவன் அதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை. ஆகவே பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க பாவமில்லா ஒரு பரிசுத்தர் நமக்குத் தேவை. அவர் தான் நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஒருமுறை பேதுரு அவரோடு கூட கடலில் நடந்த போது, திடீரென அவன் பார்வை இயேசுவை விட்டு திரும்பி ஆழ்கடலின் பக்கம் போனபோது, இமைப்பொழுதில் கடலில் மூழ்க ஆரம்பித்தான். மனதுருகமுள்ளவர் இயேசு கைவிடுவாரோ? ஆண்டவரே என்னை ரட்சியும் என்று அவன் அவருடைய மனதுருக்கமுள்ள முகத்தை நோக்கிப் பார்த்த போது உடனடியாக அவனுடைய கரத்தை பிடித்து அவனை தூக்கி எடுத்தார்.

மத்தேயு 14:30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.

ஏசாயா 1:18 உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.


கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.