Saturday, May 15, 2010

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

இயேசுவுக்கே மகிமை

சமாதானமுள்ள வாழ்க்கை வாழுவது எப்படி?

ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;

இன்றைய உலகில் யாவருமே விரும்புவது சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை. மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். ஆனாலும் விரும்பிய சமாதானம் அநேகருக்கு கிடைத்ததாக தெரியவில்லை. காரணம் என்ன?

உலக நாடுகள் சமாதானத்துக்கான பல ஒப்பந்தங்களை செய்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல பயனற்றதாகி விடுகின்றன. அநேக கிறிஸ்தவர்களும் குடும்ப சமாதானத்திற்காய் ஜெபிக்கிறார்கள், ஆனாலும் பலவேளைகளில் குடும்பங்களில் சமாதான குறைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் சமாதானத்திற்கான வழி என்ன? வேதாகமம் என்ன சொல்லுகிறது?

ஆண்டவராகிய இயேசு சமாதானத்திற்காய் என்ன செத்தார்? சமாதானம் என்பது தானாய் வரவில்லை, இயேசு சமாதானத்தை உண்டுபண்ணினாராம். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்று வேதம் கூறுகிறது.

ஆம் அவர் சமாதானத்தை உண்டுபண்ணும்படி சிலுவையில் தன்னை அடித்தவர்களை, ஈட்டியால் குத்தினவர்களை, தன்னுடைய முகத்திலே உமிழ்ந்தவர்களை, முள்முடி சூட்டினவர்களை, தன்னை நிந்தித்தவர்களை மன்னித்தார், பொறுமையோடு அவைகளை சகித்தார். இதினிமித்தம் அங்கு ஒரு சமாதானம் உருவாக்கப்பட்டது. மாறாக இயேசுவும் பதிலுக்கு பதில் எதிர் தாக்குதல் நடத்தியிருந்தால், அவரும் தன்னுடைய சீஷர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் ஓரணியில் திரட்டி மாம்சீகமாய் போராடியிருந்தால் அன்று நூற்றுக்கணக்கானவர்கள் மரித்துப்போயிருப்பார்கள். ஆனால் இயேசுவோ தான் ஒருவராய் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பொறுமையோடு சகித்ததினிமித்தம், தன்னுடைய ஜீவனை அவர் இழந்தார். ஆனால் அநேகருடைய ஜீவன் காப்பாற்றப்பட்டது. இதினிமித்தம் மிகப்பெரிய ஒரு சமாதானம் அன்று உருவானது.

சிலவருடங்களுக்கு முன்பு Blessing TV ல் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் ஒரு நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார். அதாவது அமெரிக்க ஐக்கிய தேசத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரி ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர்கள் கைநிறைய சம்பாதித்தனர், ஆனால் இந்த சகோதரி சற்று அழகில் குறைந்தவர்கள். ஆனால் ஆவிக்குரிய விஷேசித்த குணம் பெற்றவர்கள். தேவ அன்பினால் நிறைந்தவர்கள்.

இவர்களது பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, வரன் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட வரனை தேர்வு செய்தனர். இவருக்கு வேலையில்லை, மாத்திரமல்ல இவரது மிகப்பெரிய ஆசை ஒரு முறையாகிலும் அமெரிக்க ஐக்கிய தேசத்திற்கு போய், அந்த தேசத்தை பார்க்க வேண்டுமென்பது. இதினிமித்தம் அவர் தனக்கு பிடிக்காத, அந்த அழகிற்குறைந்த அந்த நர்ஸ் சகோதரியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

திருமணம் முடிந்தது. அன்று இரவே அந்த நபர் அந்த சகோதரியிடம், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய அமெரிக்கா செல்லும் ஆசையினால்தான் திருமணம் செய்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார். அந்த சகோதரியோ தேவ அன்பினால் நிறைந்த குண சாலியான ஸ்திரியல்லவா? அவர்கள் இதை தன்னுடைய பெற்றோர்களிடம் கூட சொல்லவில்லை. பொறுமையோடு சகித்துக்கொண்டார்கள். நாட்கள் சென்றன, தன்னுடைய கணவருக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த சகோதரி செய்து, அவரை அந்த தேசத்திற்கு அழைத்து சென்றார்கள். மாதங்கள் பல சென்றும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த சகோதரி பொறுமையோடு அனுதினமும் தன்னுடைய கணவனுக்கு வேண்டிய எல்லா கடமைகளையும் எந்த வெறுப்புமின்றி செய்து வந்தார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சு கணவனுக்கு எந்த ஒரு இரக்கமும் தன் மனைவி மேல் ஏற்படவில்லை. அந்த கணவன் தனி அறையில் தான் தங்குவார். அந்த சகோதரியோடு யாதொரு ஒட்டும் உறவுமில்லை அந்த கணவனுக்கு.

ஒருநாள் இரவு அந்த கணவனுக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. ஆகவே எழுந்து தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். அங்குமிங்கும் நடந்தார். தன்னுடைய மனைவி தங்கயிருந்த அந்த அறை பக்கம் போய் பார்த்தார். அந்த சகோதரி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அதை இவர் ஒட்டுக் கேட்டுகொண்டிருந்தார். ஜெபத்தின் கடைசி வேளையில் அந்த சகோதரி தன்னுடைய கணவருக்காக தேவனோடு மனதுருகி இப்படியாக ஜெபித்தார்கள். ஆண்டவரே என்னுடைய கணவனுக்கு பல மாதங்களாகியும் வேலைகிடைக்கவில்லை, அவருக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்க ஏசப்பா. அவருக்கு என்னை பிடிக்கல, எனவே அவருக்கு பிடித்த ஒரு பெண்ணை மணமகளாக கொடுத்து வேறொரு திருமணம் நடக்கவும், அவர் சந்தோஷமாக வாழவும் உதவி செய்யுங்க ஏசப்பா என்று ஜெபித்தார்கள்.

இந்த ஜெபத்தை கேட்ட அந்த கணவனின் கல் நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்தது. கண்ணீர் தாரை, தாரையாய் புரண்டோடிது. தன்னையும் அறியாமல் அழுதான். அன்று ஒரு தீர்மானமெடுத்தான். வாழ்ந்தால் ஒரே ஒரு வாழ்க்கை. அது இந்த என் மனிவியோடுதான் என்று. ஆம் அதற்கு பின்பு அவர்கள் குடும்பமாய் இணைந்து கிறிஸ்த்துவுக்குள் சமாதான, சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள்.

நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு, பஞ்சம் வந்த போது கேராரூர் என்னும் ஊரில் தங்கியிருந்த போது தேவன் அவரை ஆசீர்வதித்தார். அவர் புதிய, புதிய துரவுககளை தோண்டிய போது அங்கெல்லாம் நீர் சுரந்தது. இதினிமித்தம் பெலிஸ்தர் அவர்மேல் பொறாமைகொண்டு ஒவ்வொரு நீரூற்றையும் தூர்த்துப் போட்டார்கள். இதை நாம் ஆதியாகமம் 26 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவர் கடந்து வந்த பாதை ஏசேக்கு, சித்னா, ரெகொபோத், பெயெர்செபா. ஒவ்வொன்றாய் அவர்கள் தூர்த்து போட, அவரோ பொறுமையோடு அடுத்த துரவை தோண்டினார். அவர் பொறுமை காத்ததால், கடைசியில் தேவன் அவருக்காய் யுத்தம் செய்தார். கடைசியில் அவர்களுக்கு ஈசாக்கை பார்த்து பயமுண்டாயிற்று. எனவே துரவுகளை தூர்த்துபோடுவதை நிறுத்துனார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே கிறிஸ்த்தவர்களாகிய நம்மை தேவன் ஆசீர்வதிக்கும் போது, நாம் ஒரு புதிய கார் வாங்கும்போதோ, அல்லது வீடு கட்டும்போதோ, நம்மை சுற்றிலுமுள்ளவர்கள் பொறாமை கொண்டு அவற்றை தாக்கினால் நாம் ஈசாக்கை போல பொறுமையோடு சகித்து இன்னொன்றை வாங்க முடியுமா? கிறிஸ்த்துவின் கல்வாரி அன்பு நம்மில் நிரம்பியிருந்தால் மாத்திரமே நாம் நம்முடைய சத்துருக்களை மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபம் பண்ணவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் முடியும். இதற்கு வேண்டிய கிருபைகளை தேவன் எனக்கும், உங்களுக்கும் தருவாராக!

ஒரு விசை ஒரு போதகர் சொன்னார் ஒரு குடிகார கணவன்,அவனுக்கு அவனுடைய மனைவியை அடிப்பதுதான் வழக்கம். அதவே அவனுடைய பொழுதுபோக்கு. அந்த மனிதன் குடிபோதையில் தன்னுடைய வீட்டின் கூரையில் உள்ள ஓட்டைகள் வழியாக இரவு வேளையில் வரும் நிலா வெளிச்சத்தைப் பார்த்து, அப்பளம் என்று சொல்லி நினைத்து, தன்னுடைய மனைவியை பார்த்து சொல்லுவானாம், நீ அப்பளத்தை எல்லாம் கீழே போட்டிருக்கிறாய். எனக்கு சாப்பிட ஓன்று கூட தரவில்லை என்று சொல்லி அடிப்பானாம். அவ்வளவு குடி வெறி.

தினமும் இந்த மனிதன் குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து, இந்த சகோதரியை அடிக்க கம்பை ஒடிப்பது வழக்கம். ஒரு நாள் அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ் ஒரு நாக பாம்பு ஊர்ந்து போவதை அந்த மனைவி பார்த்தாள். அவளுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது, தினமும் கணவன் இத மரத்தில் தான் கம்பு ஒடிக்கும்படி படி வருவார். ஒரு வேலை இரவு அவர் குடிபோதையில் வரும்போது பாம்பினால் அவருக்கு எதாகிலும் தீங்கு நேரிடலாம் என நினைத்து, அந்த சகோதரி ஒரு கம்பை ஒடித்து பத்திரமாக வைத்திருந்தால். கணவன் வேலை முடித்து வீடு திரும்பினார். தினமும் மாலைவேளையில் குடிக்க புறப்படும் வேலை வந்தது. உடனடியாக அந்த மனைவி தன்னுடைய கணவனிடம் தான் அந்த மரத்தின் கீழ் பாம்பை பார்த்ததையும், எனவே கம்பு ஒடிக்கும்படி அந்த மரத்தின் அருகே இன்று போகவேண்டாம் என்றும், தான் ஒடித்து வைத்திருந்த கம்பையும் அவரிடம் கொடுத்தார்கள். தன்னை அடிக்கும் படி தானே அந்த கம்பை ஒடித்து கொடுத்ததையும், தான் அவளை அவ்வளவு அடித்த பின்பும், அவள் தன் மீது வைத்திருந்த அன்பையும் பார்த்த அந்த கணவனின் இதயம் உடைந்தது. அன்று தான் அந்த மனிதன் தன் வாழ்நாளில் அவன் குடிக்க ஆரம்பிததிலிருது அவன் குடிக்காமலிருந்த முதல் நாள். அதன் பின்பு அந்த மனிதன் குடித்ததுவுமில்லை தன் மனைவியை அடித்ததுமில்லை. அன்பினால் தன் கணவனை ஆதாயமாக்கிகொண்டாள்.

I தெசலோனிக்கேயர் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.


I பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment